Saturday, February 11, 2017

இயற்கை முறையில் சருமம் பராமரிக்கலாம்!

மிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் வெயில்காலம்தான் என்றாலும், நவம்பர் தொடங்கி பின் மார்ச் வரையில் சற்று குளிர்ச்சியான வானிலையும் நிலவுகிறது. இந்தக் காலகட்டத்தில், வீசும் குளிர்ந்த, வறண்ட காற்றால் சருமம் மிகவும் வறண்டு, சோர்ந்து, ஜீவனின்றி சுருக்கங்களுடன்  காணப்படும். இயற்கையின் பருவ மாற்றத்தினால் பாதிப்புக்குள்ளாகும் சருமத்தை இயற்கை தந்திருக்கும் கொடைகளை வைத்தே சரிசெய்ய முடியும். சருமத்தின் பொலிவைத் தக்க வைத்துக்கொள்ள ஈஸி டிப்ஸ்...

கற்றாழை (Aloe vera)

இளமையைத் தக்க வைக்கும் கற்றாழைக்கு ‘குமரி’ என்ற பெயரும் உண்டு. இதிலிருக்கும் ஆக்சின் (auxin), கிப்பெரெல்லின் (gibberellins) போன்ற ரசாயனங்கள், நம் உடலில் புதிய செல்களை உருவாக்க உதவும். இதன் சதைப் பகுதியை சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவினால், சருமம் பொலிவாகும். இதில் இருக்கும் பீட்டாகரோட்டின், வைட்டமின் சி மற்றும் இ சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைப்பதோடு சுருக்கங்களையும் நீக்கும். 

பப்பாளி பழச் சாறு

சிறந்த ‘ப்ளீச்சிங் ஏஜென்ட்’. ஏ, சி, இ உள்ளிட்ட பல வைட்டமின்கள் அடங்கியிருக்கின்றன. பப்பாளிப் பழச்சாற்றை முகத்தில் தொடர்ந்து தடவி வருவதன் மூலம் சரும வெடிப்பு, இறந்த செல்கள் மற்றும் அழுக்கு நீங்கி, பளபளப்பு கிடைக்கும்.

கசகசா


கசகசாவுடன் தண்ணீர் விட்டு அரைத்து அதன் பாலை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், சரும செல்களைப் புதுப்பித்துப் புத்துணர்ச்சி தரும். மேலும், சரும கருமையையும் கருவளையத்தையும் நீக்குவதில் வல்லது. சிலருக்கு இது சரும அலர்ஜியை ஏற்படுத்தலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

ரோஸ் வாட்டர்


பருத்தி அல்லது சுத்தமான துணியில், ரோஸ் வாட்டரை நனைத்து, சருமத்தின் மீது தேய்த்து வந்தால், குளிர் காற்றினால் ஏற்படும் வறண்ட சருமத்தையும் அதனால் ஏற்படும் எரிச்சலையும் தவிர்க்கலாம். தேங்காய் எண்ணெய், தேன், ரோஸ் வாட்டர் மூன்றையும் தலா, இரண்டு டீ ஸ்பூன்கள் அளவுக்குக் கலந்து முகம் மற்றும் கை கால்களில் தடவி வந்தால் வறண்ட சருமத்திற்கு நிரந்தர தீர்வு காணலாம். சருமத்தின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வது இதன் கூடுதல் சிறப்பு.

தேங்காய்


இளநீர், தேங்காய்ப் பால், எண்ணெய் என இதிலிருந்து கிடைக்கும் அனைத்துமே நம் அழகைப் பாதுகாப்பதில் அற்புதமானவைதான். தேங்காய்ப் பாலை எடுத்து முகத்தில் தடவி 30 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால், வறண்ட சருமம் மாறி, முகம் பளபளப்பாக மின்ன ஆரம்பித்துவிடும்.

வெந்நீர் வேண்டாம்


குளிர் காலத்தில் பலரும் கொதிக்கக் கொதிக்க வெந்நீரில் குளிப்பது வழக்கம். இது, சருமத்தை மேலும் பாதிக்கும். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. சருமத்தை வறண்டு போகச் செய்யும் சோப்புகளைத் தவிர்த்துவிட்டு, கடலைமாவு, பாசிப்பயறு மாவு, நலங்குமாவு போன்றவற்றைக் குளிக்கப் பயன்படுத்தலாம். 

No comments:

Post a Comment